Monday, September 22, 2014

// // Leave a Comment

30 வகை அடை

1.  நவதானிய அடை



தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், கொள்ளு, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, திணை, கேழ்வரகு (அத்தனையும் முளைகட்டியது), காராமணி, கறுப்பு முழு உளுந்து - தலா கால் கப், எண்ணெய், இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காராமணி, முழு கறுப்பு உளுந்து இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய தானியங்கள், காராமணி, உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக கரகரப்பாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து தேவையான உப்பு சேர்த்து, கல் நன்கு சூடானதும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். நவதானிய அடை உடலுக்கு புரத சத்தையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.



2. முளைக்கீரை அடை



தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், இளசான தண்டு இல்லாத முளைக்கீரை - ஒரு சிறு கட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும் தனியாக ஊற விடவும். ஊறிய அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைக்கவும். பருப்பு வகைகளையும் தனியாக அரைக்கவும். அரிசி மாவுடன் அரைத்த பருப்பையும் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கலக்கவும். முளைக்கீரையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். கல் காய்ந்ததும். மிதமான தீயில் ஒவ்வொரு அடையாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். இந்த அடைக்கு இட்லி மிளகாய்ப்பொடி நல்ல காம்பினேஷன்.



3. அரிசி அடை

 தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - அரை கப், பச்சரிசி - முக்கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, அரிசியைக் களைந்து மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். எல்லா சட்னிக்கும் ஏற்ற அடை இது.


4. அறுகீரை அடை


தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை - தலா ஒரு கப். காம்பு ஆய்ந்த வல்லாரை - ஒரு கைப்பிடி, பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை - ஒரு கைப்பிடி, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து வடிக்கட்டி இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து கரகரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். நறுக்கி வைத்துள்ள எல்லா கீரைகளையும் அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு கலந்து, கல் காய்ந்ததும், அடை தட்டி மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தும் செய்யலாம். தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.


5. கார அடை



தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 4 பல் (தோல் உரித்தது), மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலையுடன் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். காரமும் மணமும் நிறைந்த இந்த கார அடை ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள வெண்ணெய், வெல்லம் இருந்தால் போதும்.


6. தக்காளி அடை



தேவையானவை:

பழுத்த தக்காளி - 4 முதல் 5, புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், இஞ்சி - 1 துண்டு, காய்ந்த மிளகாய் - மூன்று, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து அரைக்கவும். சிறிது அரைபட்டதும் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைக்கவும். இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும், அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். தக்காளியின் புளிப்பும் லேசான இனிப்பும் இஞ்சி, பூண்டு, மிளகு வாசனையும் கலந்து கட்டி ருசிக்க வைக்கும். இதற்கு, தேங்காய் சட்னி ஏற்ற சைட் டிஷ்!


7. கொள்ளு அடை

 
தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், முளை கட்டிய கொள்ளு - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். அரிசியுடன் முளைகட்டிய கொள்ளு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு, கறிவேப்பிலை, கறுப்பு எள்ளை (மண் போக நன்றாக களையவும்) சேர்க்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கொள்ளும் எள்ளும் சேர்ந்து கமகமக்கும் வாசனையுடன் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அடை.


8. வாழைப்பூ அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - 4, பெரிய வெங்காயம் -1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும், வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.


9. வெஜிடபிள் அடை



தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - முக்கால் கப், காரட், முள்ளங்கி - தலா 1 (தோல் சீவி துருவிக் கொள்ளவும்), சிறிய பீட்ரூட், பிஞ்சு பீர்க்கங்காய் - தலா 1 (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 1, சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, மிளகு சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். இந்த மாவில், துருவிய காரட், முள்ளங்கி, பொடியாக நறுக்கிய பீட்ரூட், பீர்க்கங்காயை சேர்க்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து மாவுடன் சேர்க்கவும். பிறகு பொட்டுக்கடலையைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். காய்கறி - கடலை கலவையில் டேஸ்ட்டியாக இருக்கும் இந்த வெஜிடபிள் அடை.


10. வாழைத்தண்டு அடை




தேவையானவை:

புழுங்கல் அரிசி - முக்கால் கப், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - மூன்று, இளசான வாழைத்தண்டு - ஒரு சிறு துண்டு, முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாழைத்தண்டின் தோல் சீவி, நார் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் தனியா, பூண்டு, சோம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். முளைகட்டிய பயிறு, கொண்டைக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்க்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். அவையில் பிரமாதப் படுத்தும் இந்த வாழைத்தண்டு அடை.


30 வகை அடை-01 | 30 வகை அடை-02 | 30 வகை அடை-03

0 comments:

Post a Comment