Friday, September 19, 2014

// // Leave a Comment

சோள தோசை


தேவையான பொருட்கள்

நாட்டு சோளம் - 1 குவளை (200 கிராம்)
தோல் உளுந்து - 1/4 குவளை (50 கிராம்)
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இந்துப்பு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் (அரைப்பதற்கு) - 1 குவளை (200 கிராம்)


செய்முறை

தோலுடன் இருக்கும் முழு உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக 6 மணிநேரம் ஊற வைக்கவும். அதேபோல் நாட்டு சோளத்தையும் தனியாக ஊற வைக்கவும். பின்னர் இவற்றை நன்கு கழுவி அரைப்பதற்கு தயாராக வைக்கவும்.

முதலில் உளுந்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 முதல் 12 நிமிடம் வரை அரைக்கவும். மாவு நன்றாக பொங்கி, மென்மையாக வர வேண்டும். இந்த மாவை வழித்து மற்றொரு பாத்திரத்தில் சேமிக்கவும்.

இப்போது கிரைண்டரில் சோளத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். குறைந்தபட்சம் 8 நிமிடத்திற்குள் மாவு மென்மையாக அரைக்கப்பட்டு விடும். இந்த மாவை வழித்து, ஏற்கனவே உளுந்து மாவு இருக்கும் பாத்திரத்தில் போடவும்.

அரைத்து வைத்துள்ள மாவுடன், உப்பு சேர்த்து மாவு முழுவதையும் நன்றாக கலந்து கொள்ளவும். அதை அப்படியே 8 மணிநேரத்திற்கு மூடி வைத்து, நன்கு புளிக்க விடவும். இப்பொழுது தோசை வார்ப்பதற்கு மாவு தயார்.

தோசை வார்ப்பில், ஊத்தப்பம் அளவிற்கு சற்று தடிமனாக, மாவை பரப்பி தோசையை வேக வைக்கவும். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு, நிலக்கடலை சட்னி / ஏதாவது ஒரு காய்கறி குருமா / தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.


குறிப்பு

மாவு அரைக்கும் பொழுது, குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தவும். ஒருவேளை தோசை வார்க்கும் பொழுது, மாவு மிகவும் கெட்டியாக இருப்பது போலிருந்தால், அப்போது மட்டும் சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும். மாவில் நீரின் அளவு சிறிது கூடினாலும், தோசை வேகும் நேரம் அதிகரிக்கும். அதேபோல் தோசை வெளிப்பக்கம் வெந்திருந்தாலும், உள்ளே வேகாமல் இருப்பது போல், பிசுபிசுப்பு தன்மையுடன் தெரியும். எனவே மாவு அரைக்கும் போது கவனம் தேவை.

0 comments:

Post a Comment