Monday, September 29, 2014

// // Leave a Comment

மூட்டு வலி

மூட்டு வலிக்கான காரணங்களும், சித்த மருத்துவ சிகிச்சையும்

குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி

ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.

ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டு வலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.


ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்

இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.

முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.

மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.

மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்' வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.


பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி

பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.

இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும். பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர்.


சோரியாட்டிக் ஆர்த் ரைடிஸ்

காளாஞ்சக படை என்ற தோலில் உண்டாகும் செதில் உதிர்வு நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை பெறாமல், பராமரிக்காமல் இருந்தால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டு அசைக்க முடியாமலும், எலும்பு தோற்றத்தில் நெளிந்தும் குறுகியும், விகாரமாக தோன்றும். நகக்கண் நிறம் மாறியும், சதை துருத்தியும் காணப்படும்.

சோரியாஸ் வந்தவர்கள் அதற்கு முறையான சிகிச்சை செய்யாத போது இந்த கொடிய வியாதியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நல்ல சுகம் பெற முடியும்.


முடக்குவாதம்

மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.

நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த வியாதி பியூரன்களால் இப்படி ஆகிறது. மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

இந்த அளவு குறைகின்றபோது இவ்வியாதி வர வாய்ப்பாகிறது. இவ்வியாதி பெண்களை விட ஆண் களுக்கே அதிகமாக காணப்படுகிறது. எனவே மூத்திர நாளங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், யூரிக் அமிலம் உடலில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


எளிய வழிமுறைகள்

மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்

1. இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

2. அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

3. அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

4. மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.

5. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6. குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.

7. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

8. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும்.

0 comments:

Post a Comment